இலங்கை
நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றுப் பாரம்பரியத்துடன்,
நாட்டின் இறைமையைக் காப்பதிலும் தாய் நாட்டிற்கு நம்பிக்கையானவர்களாகவும்
சக இனத்தவர்களோடு சகோதர வாஞ்சையோடும் முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
சிங்கள மன்னர்களின் ஆட்சிக்காலம் முதல் இன்று வரை நாட்டின் நலனிற்காக
முஸ்லிம்கள் உழைத்து வருகிறார்கள். அண்மையில் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு
வந்த இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக இலங்கையில் வாழும் அனைத்து
முஸ்லிம்களும் அணிதிரண்டு ஆர்ப்பாட்டம் செய்து, தாய்நாடு மீதான தமது
தேசப்பற்றை வெளிப்படுத்தினர். அத்தோடு, அனைத்து முஸ்லிம் நாடுகளும்
அமெரிக்காவை எதிர்த்து,இலங்கைக்கு ஆதரவளிக்க முஸ்லிம்களே வழிவகுத்தனர்.நாட்டின் பெரும் பான்மை இனத்தவர்களால் அவ்வப்போது ஏற்படும் இன்னல்களை சட்ட ரீதியாக அணுகுபவர்களாகவும் கடும்போக்கு மதத் தீவிரவாதிகளால் சீண்டப்படும் போது, பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாகவும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுபவர்களாகவும் இருந்து வருகின்றார்கள். இவ்வாறு நாட்டுக்கு விசுவாசமகச் செயற்படும் முஸ்லிம் சமூகத்தின் வணக்கஸ்தளங்கள் பல தடவைகள் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைத்து தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, முஸ்லிம்களின் மதச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொடரில் ஏப்ரல் 20ஆம் திகதி தம்புள்ள நகரில் அமைந்துள்ள அல் ஹைரிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் சிங்கள கடும்போக்காளர்களினால் முற்றுகையிடப்பட்டு, தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை இலங்கையின் அரசில் சாசனத்திலுள்ள சட்டங்களை பெரிதும் மதித்து வாழும் அனைத்து முஸ்லிம்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
அரச அங்கீகாரம் பெற்றுள்ள முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அல் ஹைரிய்யா ஜூம்ஆ மஸ்ஜிதை, மத நல்லிணக்கத்தைப் பேண வேண்டிய புத்த பிக்குகளே முன்னின்று, சிங்கள மக்களை அணி திரட்டி வந்து, தாக்குதல் மேற்கொண்டமை இந்த நாட்டின் உயிர் நாடியான அரசியல் யாப்பை அவமதித்த செயலாகும். பொலிசார் மற்றும் இராணுவத்தினர் முன்னிலையில் காவி உடை அணிந்த இவர்கள் பள்ளியின் உள்ளே சென்று அங்கே இருந்த சகல பொருட்களையும் உடைத்துள்ளனர். முஸ்லிம்களின் வேதமான அல்குர்அனை வீசி எறிந்துள்ளனர். ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனதையும் காயப்படுத்தியுள்ள இச்செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மத சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைத்துள்ள ஒரு சமூகத்தின் நம்பிக்கையை பேணிப் பாதுகாக்க வேண்டிய, ஆட்சியில் அமர்ந்துள்ள அரசாங்கம் அதன் பாதுகாப்புத்துறை நியாயமாகச் செயற்படாத போது, நாட்டில் அமைதியின்மையே ஏற்படும் என்பதைக் கவனத்திற் கொண்டு, பள்ளிவாசலை அதே இடத்தில் மீண்டும் நிர்மாணிக்கவும், உரிய இடத்திலேயே முஸ்லிம்களிடம் ஒப்படைக்கவும் ஆவனம் செய்யுமாறு அரசாங்கத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, மாற்றுக் காணியில் பள்ளிவாசலை அமைக்க முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனையை திட்டவட்டமாக முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.
நாட்டின் சட்ட ஒழுங்கை மதித்து, சட்ட ரீதியான முறையில் தீர்வை நாடுமாறும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும் இறையில்லத்தைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுக்க முன்வருமாறும் கேட்டுக் கொள்கிறது.
http://www.sltjweb.com/2012/04/24/dambulla-pallivasal-idippai-sri-lanka-thawheed-jamaath-vanmaiyaga-kandikkiradhu/
0 comments:
Post a Comment